Monday, August 15, 2011

நாங்கள் நாடோடிகள்

பிறந்த ஊரிலேயே,
பிழைக்க வழி இருந்தும்,
படித்த படிப்பு, எங்கள்
பிடரியைப் பிடித்து
வெளியே தள்ளியது.
அறிவியலோ, பொறியியலோ, மென்பொருளோ,
எங்கள் விதி வழியில் வேறுபாடில்லை.
பெண்களே, உங்களுக்காவது
ஒரு புகுந்த வீடு தான்
எங்களுக்கோ, பல புகுந்த ஊர்கள்.
அறிமுகமே இல்லாதவர்கள்
அறைத்தோழர்கள் ஆவார்கள்.
அரிசியும் பருப்பும் நாங்கள்
வாங்கி சமைப்போம்,
பல குடும்பங்கள் இருந்தும்
ஒரே கூட்டு குடும்பமாய்
இருப்போம்,
அதுவும் எங்களுக்கு நிரந்தரமல்ல,
அப்போதும் நாங்கள் ஊர் மாறுவோம்,
மணமான பின்னாலும்,
மற்றுமொரு முறை ஊர் மாறுவோம்,
பிள்ளைகள் பிறந்த பின்னர்,
பிறிதொரு முறை ஊர் மாறுவோம்;
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
எங்களுக்கும் சாலப் பொருந்தும்,
அன்னியர்கள் எங்களுக்கு நண்பரானார்கள்
ஆனால் பிறந்த ஊர்
எங்களுக்கு அந்நியமாகிப் போனது,
ஆம், நாங்கள் நாடோடிகள்.

2 comments: