Monday, August 15, 2011

நாங்கள் நாடோடிகள்

பிறந்த ஊரிலேயே,
பிழைக்க வழி இருந்தும்,
படித்த படிப்பு, எங்கள்
பிடரியைப் பிடித்து
வெளியே தள்ளியது.
அறிவியலோ, பொறியியலோ, மென்பொருளோ,
எங்கள் விதி வழியில் வேறுபாடில்லை.
பெண்களே, உங்களுக்காவது
ஒரு புகுந்த வீடு தான்
எங்களுக்கோ, பல புகுந்த ஊர்கள்.
அறிமுகமே இல்லாதவர்கள்
அறைத்தோழர்கள் ஆவார்கள்.
அரிசியும் பருப்பும் நாங்கள்
வாங்கி சமைப்போம்,
பல குடும்பங்கள் இருந்தும்
ஒரே கூட்டு குடும்பமாய்
இருப்போம்,
அதுவும் எங்களுக்கு நிரந்தரமல்ல,
அப்போதும் நாங்கள் ஊர் மாறுவோம்,
மணமான பின்னாலும்,
மற்றுமொரு முறை ஊர் மாறுவோம்,
பிள்ளைகள் பிறந்த பின்னர்,
பிறிதொரு முறை ஊர் மாறுவோம்;
யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
எங்களுக்கும் சாலப் பொருந்தும்,
அன்னியர்கள் எங்களுக்கு நண்பரானார்கள்
ஆனால் பிறந்த ஊர்
எங்களுக்கு அந்நியமாகிப் போனது,
ஆம், நாங்கள் நாடோடிகள்.

Saturday, August 13, 2011

நிலவில்லா வானம்

விடுமுறைக்காய் வீடு செல்கின்றேன்,
பேருந்தில் பேசிக் கொண்டனர்,
இன்று பௌர்ணமியாம்!
பாவம், அவர்களுக்கு தெரியாது,
இன்னும் மூன்று நாட்களுக்கு
என் வானில் அமாவசை என்று!!!

வானவில்

நிலவையும்,
வானவில்லையும்,
ஒன்றாகப்
பார்க்க முடியாதாம்?!
யார் சொன்னது,
அதோ, என்னவளின் கண்கள்!!

தொடுகை

உனது கணினியின்
விசைப்பலகை ஆகவேணும்
மாறிவிட வரம் கொடு!
அதைதானே நீ
அதிகம் தொடுகிறாய்.!!

நிறுத்தம்

உன் பேருந்து நிறுத்தத்தில்
நீ இறங்கியதும்
நகர்ந்து விடுகின்றது,
பேருந்து!
நகர மறுத்து
அங்கேயே நின்றுவிடுகின்றது
என் மனது.

இடைவேளை

தேநீர் எவ்வளவு
இனிப்பாக இருந்தாலும்
நீ இல்லாத
தேநீர் இடைவேளைகள்
இனிப்பதில்லை எனக்கு.
பிடித்த உணவாயினும்
நீ இல்லாத
உணவு இடைவேளைகள்
பிடிப்பதில்லை எனக்கு.

தேவதைகளின் சாபம்

நீ உண்ட
மிச்ச பருக்கைகளை
உண்ட காக்கைகளை
காணவில்லையாம்,
ஓ! சாபம் நீங்கி
தேவதைகள் ஆகிவிட்டனவோ!!

வெறுமை

இருக்கைகள் எல்லாம் நிறைந்திருந்தும்
நீ இல்லாத போது
எனக்கு வெறுமையாய்
தெரிகின்றது
நம் அன்றாடப் பேருந்து!!

Friday, August 12, 2011

யாருக்கும் தெரியாமலிருந்தும்
எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.
நான் அவளையே பார்ப்பதாக!!!
எல்லோருக்கும் தெரிந்திருந்தும்
அவள் யாருக்கும் சொல்லவில்லை
அவளும் என்னைப் பார்ப்பதை!!!

Thursday, August 11, 2011

நீ பூத்த புன்னகை எனக்கா?
தெரியாது!!!!
ஆனால்
உன் புன்னகையை பார்த்து
எனக்குள் பூத்த பூ
என்றும்
உனக்காகத்தான்!!!!